தேசிய செய்திகள்

கீழ்த்தரமான அரசியல்... பெண்ணின் மரியாதை நகைச்சுவை ஆக்கப்பட்டுள்ளது...!- சமீர் வான்கடே மனைவி ஆவேசம்

பெண்ணின் மரியாதை நகைச்சுவை ஆக்கப்பட்டுள்ளதாக மராட்டிய முதல்-மந்திரிக்கு சமீர் வான்கடேவின் மனைவி கடிதம் எழுதியுள்ளார்.

மும்பை,

மும்பை அருகே உல்லாச கப்பலில் போதை பொருள் கடத்தல் மற்றும் அவற்றை பயன்படுத்தியதற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கடந்த அக்டோபர் 2ம் தேதியன்று கைது செய்யப்பட்டார். இதற்காக போதைப் பொருள் தடுப்பு முகமையின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடேவை, தனிப்பட்ட முறையில் மராட்டிய மந்திரி நவாப் மாலிக் தாக்கி பேசி வருகிறார்.

சமீர் வான்கடே பிறப்பால் ஒரு முஸ்லிம், ஆனால் அவர் இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என போலியாக சாதிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்துள்ளார். ஆர்யன் கானை விடுவிக்க லஞ்சமாக பணம் தரவேண்டும் என மிரட்டினார், சட்டவிரோதமாக போனை ஒட்டுக்கேட்டார் என சமீர் வான்கடே மீது நவாப் மாலிக் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.

நவாப் மாலிக்கின் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால் சமீரை எந்த நேரமும் மும்பை போலீசார் கைது செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

சமீர் வான்கடே மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் எஸ்.என்.பிரதான், துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங்கை நியமித்துள்ளார். சமீர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால் அவர் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார்.

பிரபாகர் செயில் என்ற சாட்சி, சமீர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் போதைப் பொருள் வழக்கில் இருந்து ஆர்யனை விடுவிக்க 25 கோடி ரூபாய் கேட்டதாக கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்போது அவர் மீது விசாரணை நடைபெறுகிறது. இது தவிர மும்பை போலீசாரும் சமீர் மீதான ஊழல் புகாரை விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீரின் மனைவி, முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

ஒரு மராட்டியர் என்ற அடிப்படையில் உங்களிடம் (உத்தவ் தாக்கரே) இருந்து சிறிதளவாவது நீதியை எதிர்பார்க்கிறேன். தேவையில்லாமல் எனது தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இன்று பாலாசாகேப் தாக்கரே (உத்தவ் தாக்கரேவின் தந்தை) உயிரோடு இருந்திருந்தால் ஒரு பெண்ணின் மரியாதை மீதான தனிப்பட்ட தாக்குதலை சகித்துக் கொண்டிருக்கமாட்டார்.

அவருடைய தலைமைப் பண்பு மற்றும் படிப்பினையின் வழித்தோன்றலாகவே உங்களை பார்க்கிறேன். சத்ரபதி சிவாஜி மகாராஜாவை உத்வேகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த அரசில் ஒரு பெண்ணின் மரியாதை நகைச்சுவை ஆக்கப்பட்டுள்ளது.

நான் ஒரு நடிகை, என்னால் அரசியலை புரிந்து கொள்ளமுடியவில்லை. அதில் எனக்கு ஆர்வமும் கிடையாது. என் மீது நடக்கும் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்கள் அரசியலின் கீழ்நிலையை காட்டுகிறது. எனக்கும், என் குடும்பத்தினருக்கும் அநீதி இழைக்கப்படாது என உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கிராந்தி ரெட்கர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு