சாதாரணமாக பயன்படுத்தப்படும் பட்டன் போன்களைக் கொண்டும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் ‘போன்பே யுபிஐ 123பே’ என்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன் மூலம் பல்வேறு சேவைகளை எளிதாகப் பயன்படுத்த முடிகிறது. குறிப்பாக, கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகள் மூலம் கட்டணங்களை ஒரு நொடியில் அனுப்ப முடிகிறது. பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை தற்போது பெருமளவு பண பரிவர்த்தனை யுபிஐ வழியாகவே நடக்கிறது.
இந்த நிலையில், இணையவசதி இல்லாமலேயே பணம் அனுப்பும் புதிய வசதியை போன்பே அறிமுகப்படுத்தியுள்ளது. சாதாரணமாக பயன்படுத்தப்படும் பட்டன் போன்களைக் கொண்டும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் ‘போன்பே யுபிஐ 123பே’ என்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமானோர் சாதாரண மாடல் மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கும் யுபிஐ அடிப்படையிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய சேவை SMS அடிப்படையிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், இணைய இணைப்பு இல்லாமலும் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். குறிப்பாக குறைந்த அளவிலான 2ஜி இணைப்பு மட்டுமே கிடைக்கும் பகுதிகளிலும் இந்த சேவை செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.