மும்பை,
மும்பை கோரேகாவ் பகுதியில் வசித்து வரும் 65 வயது முதியவர், நேற்று முன் தினம் பிற்பகல் ஜோகேஸ்வரில் உள்ள மையத்திற்கு கொரோனா தடுப்பூசி போட சென்றார். அவருக்கு 3.37 மணிக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.
இந்தநிலையில் ஊசி போட்டவுடன் அந்த இருக்கையிலேயே அவர் சுருண்டு விழுந்தார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் மாலை 5 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தநிலையில் தடுப்பூசி போட்ட முதியவர் உயிரிழந்தது குறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், "உயிரிழந்த முதியவருக்கு இருதய நோய் இருந்து உள்ளது. இதேபோல சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகளும் அவருக்கு இருந்து இருக்கிறது. எனினும் முதியவரின் மரணத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும்" என்றார்.
பிவண்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் 2-வது முறையாக தடுப்பூசி போட்ட 40 வயது சுகாதாரப்பணியாளர் உயிரிழந்தார். இந்தநிலையில் மும்பையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.