திருச்சூர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், திருச்சூர் முன்னாள் மாவட்டச் செயலாளருமான பேபி ஜான் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள தைக்குளத்தில் 1952-ஆம் ஆண்டு பிறந்தவர் பேபி ஜான். இவர் அதே பகுதியில் உள்ள பி.வி.எம் எல்.பி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். 1969-ஆம் ஆண்டு முதல் இடதுசாரி இயக்கங்களில் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார். 1971-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, கட்சியின் முழுநேரப் பணியில் ஈடுபடுவதற்காக 1991-ம் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். 2006-ம் ஆண்டு முதல் திருச்சூர் மாவட்டச் செயலாளராக பொறுப்பு ஏற்றார்.
73 வயது நிரம்பிய பேபி ஜான், வயது முதிர்வு மற்றும் உடல்நிலை பாதிப்புகள் காரணமாக திருச்சூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நீண்ட நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார். எனினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பேபி ஜான் உடல் இன்று காலையில் சிபிஐ(எம்) திருச்சூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் பூவத்தூரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் 2.30 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும். பிற்பகல் 3 மணி முதல் சாவக்காட்டில் உள்ள ஹோ சி மின் நினைவு மண்டபத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். மாலை 4 மணிக்கு சாவக்காடு பொது சுடுகாட்டில் இறுதிச் சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.