தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான சதிச்செயல்: தடைசெய்யப்பட்ட அமைப்பின் தலைவிக்கு ஆயுள் தண்டனை

நஸ்ரின் , பமிதாவுக்கு தலா 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

டெல்லி,

ஜம்மு-காஷ்மீரை சேர்ந்தவர் அசியா அன்ருபி (வயது 62). இவர் 1987ம் ஆண்டு துக்தரன் இ மிலட் என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிரான சதிச்செயல்களில் ஈடுபட்டார். மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வந்தார்.

இந்தியாவுக்கு எதிராக வெறுப்பு பேச்சு, காஷ்மீர் பிரிவினைவாதத்திற்கு ஆதரவு, பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை அசியா அன்ருபி தனது கூட்டாளிகளான நஹிதா நஸ்ரின் (வயது 58), சோபி பமிதா (வயது 48) ஆகியோருடன் ஈடுபட்டு வந்தார்.

இதையடுத்து, தேசத்திற்கு எதிரான சதிச்செயலில் ஈடுபட்ட வழக்கில் துக்தரன் இ மிலட் அமைப்பின் தலைவி அசியா அன்ருபி மற்றும் அவரது கூட்டாளிகள் நஸ்ரின், பமிதா என 3 பேரும் கடந்த 2018ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டனர். அவரது அமைப்பான துக்தரன் இ மிலட்டிற்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட அசியா அன்ருபி உள்பட 3 பேர் மீதும் சதிச்செயல், பயங்கரவாதத்திற்கு ஆதரவு உள்பட பல்வேறு வழக்குகளில் டெல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையில் அசியா அன்ருபி மற்று அவரது கூட்டாளிகள் நஸ்ரின், பமிதா ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளி அசியா அன்ருபிக்கு ஆயுள் தண்டனையும் அவரது கூட்டாளிகள் நஸ்ரின் , பமிதாவுக்கு தலா 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.