தேசிய செய்திகள்

ராஜஸ்தான் ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதிக்கு எதிராக அடுக்கடுக்கான முறைகேடு புகார்

ராஜஸ்தான் பொறுப்பு தலைமை நீதிபதி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

புதுடெல்லி,

ராஜஸ்தான் ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி பல்வேறு தீவிரமான நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்தீப் மேத்தா, தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராஜஸ்தான் ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக இருப்பவர் சஞ்சீவ் பிரகாஷ் சர்மா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு ராஜஸ்தான் ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2022-ம் ஆண்டு பாட்னா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். பின்னர் தனது உடல்நிலையை காரணம் காட்டி மீண்டும் ராஜஸ்தானுக்கு மாற்றும் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் 2023-ல் நிராகரித்தது. எனினும் 2025-ம் ஆண்டு மீண்டும் அவர் ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் பெற்றார். அங்கு கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

நிர்வாக முறைகேடுகள்

இந்த நிலையில் நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா மீது அடுக்கடுக்காக நிர்வாக முறைகேடு புகார்களை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்தீப் மேத்தா கூறியுள்ளார்.குறிப்பாக, வேறு அமர்வுகளில் பட்டியலிடப்பட்ட வழக்குகளை பின்னர் தகுந்த காரணங்கள் இன்றி தனது அமர்வுக்கு மாற்றி நிர்வாக முறைகேடு களில் ஈடுபடுவதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தார். அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக சூர்யகாந்த் உறுதியளித்தும் இதுவரை எடுக்கவில்லை. எனவே இதை சுட்டிக்காட்டி கடந்த 2, 10 மற்றும் 17-ந்தேதிகளில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு மீண்டும் கடிதங்கள் அனுப்பி உள்ளார்.

வேண்டியவர்களுக்கு ஆதரவு

அதில் ராஜஸ்தான் பொறுப்பு தலைமை நீதிபதி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.முக்கியமாக, செல்வாக்குள்ள மற்றும் பணம் படைத்த மனுதாரர்களின் வழக்குகளை வேண்டுமென்றே தனது அமர்வுக்கு மாற்றுவதாக குற்றம் சாட்டியிருக்கும் அவர், 'முறைகேடான நிர்வாகம்', 'முறைகேடுகள்', 'தனக்கு வேண்டியவர்களுக்கு ஆதரவு' மற்றும் 'பாகுபாடு' போன்ற முறை கேடுகளில் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், நீதிபதி சர்மாவின் நீதித்துறை செயல்பாடுகள் குறித்து ஏராள மான புகார்கள் தனக்கு வந்திருப்பதாகவும், அவற்றை பார்க்கும்போது நீதிபதி சர்மாவின் நேர்மை மீது சந்தேகங்களை எழுப்புவதாகவும் கூறியுள்ளார்.எனவே ராஜஸ்தான் ஐகோர்ட்டு பொறுப்பு நீதிபதியை உடனடியாக மாற்றி, அந்த ஐகோர்ட்டுக்கு வெளிமாநிலத்தை சேர்ந்த ஒருவரை புதிய தலைமை நீதிபதியாக நியமிக்குமாறும் தனது கடிதங்களில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சர்மா மீதான இந்த புகார்கள் இந்திய நீதித்து றையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.