பெங்களூரு,
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா அருகே, கணவனின் கள்ளத்தொடர்பு விவகாரத்தால் 7 மாதக் குழந்தையின் கண் முன்னே இளம் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிக்மகளூருவை சேர்ந்த சானிகா கவுடா (வயது 24). இவரது கணவர்,பெங்களூருவில் கேப் டிரைவராக வேலை செய்யும் ஷரன் கவுடா. இந்த தம்பதிக்கு 1ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி சானிகாவுக்கு தெரியவந்தது. இதன்காரணமாக சரண்கவுடா, சானிகா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதே நேரத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததாலும், கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவும் பெற்றோர் வீட்டுக்கு சானிகா வந்திருந்தார். குழந்தை பிறந்த பிறகும் அவர் சிக்கமகளூருவுக்கு செல்லவில்லை.இந்த நிலையில் அந்த பெண்ணுடன் பேசிய ஆடியோவை கணவர் மனைவியின் மொபைலுக்கு அனுப்பியுள்ளார்.
கணவர் அனுப்பிய ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்த சானிகா, கணவரை வீடியோ காலில் அழைத்து கதறி அழுது வாக்குவாதம் செய்துள்ளார். வீடியோ கால் ஓடிக்கொண்டிருக்கும் போதே, தனது 7 மாத குழந்தை தூங்கிக் கொண்டிருந்த அறையில் மின்விசிறியில் சானிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சானிகாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் பரப்பன அக்ரஹாரா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கணவரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.