புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டம், சுக்கிந்தா பிளாக்கில் அமைந்துள்ள காளியபானி சாருப்பியா பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் வாசுதேவ் தேக்கிரி. இவர் கடந்த 17ம் தேதி மாணவர்கள் சிலர் செய்த தவறுக்காக தண்டனை கொடுக்க முடிவெடுத்துள்ளார்.
வழக்கமாக பிரம்பால் அடிப்பார், இல்லையென்றால் தோப்புக்காரணம் போட சொல்வர். ஆனால் இந்த முறை அவர் கையில் எடுத்த புதுவித ஆயுதம் மாணவர்களை கடுமையாக பாதித்துள்ளது. அதாவது, பீஞ்சிவாட்டி எனும் ஒரு வகை விஷத்தன்மை கொண்ட தேள் கொடுக்கு செடி கிளைகளை உடைத்து மாணவர்களின் பேண்ட்டுக்குள் கட்டாயப்படுத்தி திணித்துள்ளார்.
அந்த செடி பட்ட உடனே 10-க்கும் மேற்பட்ட மாணவர்களின் உடல் முழுக்க கடுமையான அரிப்பு தொடங்கியதோடு உடல் முழுக்க தடிமனும் ஏற்பட்டுள்ளது. வலியாலும், அரிப்பாலும் மாணவர்கள் துடித்ததை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். தங்களின் பிள்ளைகளுக்கு நேர்ந்த கொடுமையை கண்டு கோபமடைந்த பெற்றோர் பள்ளியின் நுழைவாயிலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பாதிக்கபட்ட தங்கள் பிள்ளைகளுக்கு நீதி வேண்டும் என்றும், தலைமையசிரியார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
இதையடுத்து வாசுதேவ் தேக்கிரி தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டதுடன், இனி இது போன்ற தவறு நடக்காது என்று எழுத்துபூர்வமாக மன்னிப்பு கடிதத்தையும் வழங்கியுள்ளார். இதனால் பெற்றோர் சமாதானம் அடைந்தனர். எனினும், இந்த சம்பவம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவியதால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் வாசுதேவ் தேக்கிரி உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.