தேசிய செய்திகள்

கடுமையான வானிலை; மம்தா பானர்ஜி பயணித்த விமானம் 1 மணி நேரம் வானில் வட்டமடித்தது

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தில் 20 நிமிடங்களுக்கு விமான இயக்கங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மேற்கு வங்காளத்தில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று முதல் பிரசாரம் செய்ய தொடங்கினார். இந்நிலையில், அவர் ஆண்டாள் நகரில் தேர்தல் பிரசாரம் முடித்து விட்டு சிறிய ரக தனியார் ஜெட் விமானத்தில் புறப்பட்டார். அவர் பயணித்த விமானம் இன்று மாலை கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.

அப்போது, கனமழை மற்றும் இடி போன்ற கடுமையான வானிலை சூழலால், விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. சரியாக 4 மணிக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது, தொடர்ந்து பெய்த கனமழை, பலத்த காற்றால், அதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், அந்த விமானம் 1 மணி நேரம் வானில் வட்டமடித்தது. பல முறை தரையிறங்க முயன்றும் அது பலனளிக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தில் 20 நிமிடங்களுக்கு விமான இயக்கங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில், மம்தா பானர்ஜி பயணித்த விமானம் மீண்டும் முக்கிய விமான நிலையத்திற்கு திரும்ப சென்றது.