புதுடெல்லி
பாலியல் பலாத்கார வழக்கை மறைக்க ரூ.5 கோடி லஞ்சம் கேட்டது தொடர்பாக பஞ்சாப் முதல்-மந்திரி மனைவிக்கு எதிராக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவருடைய மனைவி குர்பிரீத் கவுர். இந்நிலையில், பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை மறைக்க கவுர், ரூ.5 கோடி லஞ்சம் கேட்டது தொடர்பான தகவல் பரவி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினரான பிரியங் கனூங்கோ கூறும்போது, பஞ்சாப்-அரியானா கோர்ட்டின் நீதிபதி ரன்ஜித் சிங் எங்களுக்கு அளித்த புகாரில், பஞ்சாப் முதல்-மந்திரியின் மனைவி கவுர், பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு ஒன்றை மறைப்பதற்காக, அதற்கு ஈடாக கவுர் ரூ.5 கோடி லஞ்சம் கேட்டார் என தெரிவித்து உள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புடன் தொடர்புடைய வழக்கில் இதுபோன்ற உயர் பதவி வகிப்போருக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு தீவிர கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் ஆகும். இதுபற்றி பதிலளிக்கும்படியும், அறிக்கை சமர்பிக்கும்படியும் மாநில தலைமை செயலாளர் மற்றும் பஞ்சாப் டி.ஜி.பி.க்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுதவிர, மத்திய உள்விவகார அமைச்சகத்தின் பெண்கள் பாதுகாப்பு பிரிவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது என தெரிவித்து உள்ளார். அதன் அடிப்படையிலேயே நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.