தேசிய செய்திகள்

மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார்: விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை

மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் மீது கொடுக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, விசாரணை நடத்த காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர், முன்பு பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். அந்த காலகட்டத்தில் அவர் தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சில பெண் பத்திரிகையாளர்கள் தற்போது குற்றம் சாட்டி உள்ளனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டனர். ஆனால், அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார். அதுபோல், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ராவும் பதில் அளிக்கவில்லை.

இதற்கிடையே, இந்த குற்றச்சாட்டு பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், இது தீவிரமான புகார். இதுபற்றி சம்பந்தப்பட்ட மந்திரியும், பிரதமரும் பேச வேண்டும். மவுனமாக இருப்பது சரியல்ல என்றார்.