டெல்லி,
கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் 115 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய குடியரசு நாடு செசல்ஸ். இந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் பேட்ரிக் ஹெர்மைனி வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
இதனிடையே, இந்தியா , செசல்ஸ் இருநாடுகளுக்கு இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று பேட்ரிக் ஹெர்மைனி இந்தியா வந்துள்ளார்.
6 நாட்கள் பயணமாக பேட்ரிக் ஹெர்மைனி கடந்த 5ம் தேதி இந்தியா வந்தார். விமானம் மூலம் சென்னை வந்த பேட்ரிக் ஹெர்மைனி சென்னை, மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து பேட்ரிக் ஹெர்மைனி டெல்லி சென்றார்.
இந்நிலையில், டெல்லி சென்ற செசல்ஸ் ஜனாதிபதி பேட்ரிக் ஹெர்மைனி இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.