தேசிய செய்திகள்

“பெண் சக்தியின் வெளிப்பாடாக திகழ்ந்தவர்” - ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி புகழாரம்

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் (மன் கி பாத்) நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று தனது 131வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது, டெல்லியில் சமீபத்தில் நடந்து முடிந்த ஏ.ஐ. மாநாடு 2026 குறித்து அவர் விரிவாகப் பேசினார். அதில், “அந்த மாநாட்டின் கண்காட்சியில் உலகத் தலைவர்களுக்கு இந்தியாவின் ஏஐ கண்டுபிடிப்புகளைக் காட்டினேன். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், விவசாயிகள் தங்கள் பால் பண்ணைகளை 24 மணிநேரமும் ஏ.ஐ. உதவியுடன் கண்காணிப்பதிலும் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் உலகையே வியக்க வைத்துள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா என்று அவருக்கு புகழாரம் சூட்டினார்.

இதுகுறித்து பேசிய அவர், “நமது நாட்டில், சமூக நலனுக்காக பாடுபட்டவர்கள்... பொதுமக்களுக்கு முன்னுரிமை அளித்தவர்கள் எப்போதும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறார்கள். அம்மா ஜெயலலிதா அவர்கள் அத்தகைய பிரபலமான தலைவர்களில் ஒருவர். பிப்ரவரி 24 ஆம் தேதி அவரது பிறந்தநாள் விழா.

பெண் சக்தியின் வெளிப்பாடாக திகழ்ந்தவர் ஜெயலலிதா.. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஜெயலலிதா கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடனான எனது நினைவுகள் பசுமரத்தாணி போல இருக்கிறது.

இன்றும் கூட, நான் மாநிலத்திற்குச் சென்றபோது, ​​தமிழக மக்கள் அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தை நான் உணர்கிறேன். அம்மா ஜெயலலிதாவை பற்றிக் குறிப்பிடுவது தமிழக மக்களின் முகங்களில் ஒரு பிரகாசத்தைக் கொண்டுவருகிறது. குஜராத்தில் எனது பதவியேற்பு விழாக்களில் அவர் கலந்து கொண்டார். அவரது சிந்தனை மிகவும் தெளிவாக இருந்தது” என்று கூறினார்.