AI Image 
தேசிய செய்திகள்

காதலியின் கணவரை கொலை செய்ய விபரீத திட்டம் வகுத்த வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கல்லூரியில் படிக்கும் போது அப்சர் கான் மனைவியை ஒருதலையாக காதலித்து உள்ளார்

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் கைராக்கர் மாவட்டம் மன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் அப்சர் கான். இவருக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் அனுப்பியது யார் என்ற முகவரி இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் போலீசில் புகார் அளித்தார். உடனடியாக அங்கு வந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் பார்சலை சோதனை செய்தனர். சோதனையில் அதில் ஒரு மியூசிக் சிஸ்டம் இருந்தது. அதன் ஸ்பீக்கரில் 2 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்து. உடனடியாக போலீசார் அதனை செயலிழக்க செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் வினய் வர்மா என்பவர் அந்த பார்சலை அனுப்பியது தெரியவந்தது. அவர் கல்லூரியில் படிக்கும் போது அப்சர் கான் மனைவியை ஒருதலையாக காதலித்து உள்ளார். அந்த பெண்ணுக்கு திருமணம் ஆனதும் அவரது கணவரை கொல்ல இந்த பார்சலை அனுப்பியது தெரியவந்தது.. இதை தொடர்ந்து அவரையும், அவரது 6 கூட்டளிகளையும் போலீசார் கைது செய்தனர். கடந்த 2023-ம் ஆண்டு இதேபோன்று கபீர்தாம் மாவட்டத்தில், மனைவியின் முன்னாள் காதலரிடம் இருந்து திருமண பரிசாக பெறப்பட்ட பார்சல் வெடித்து சிதறியதில் புதிதாக திருமணமான மாப்பிளையும், அவரது மூத்த சகோதரரும் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.