ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் மாவட்டத்தில் உள்ள ரிசாலா பஜார் பகுதியை சேர்ந்தவர் 23 வயதான பிரின்சி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் மருத்துவ படிப்பை முடித்த இவர் மேற்படிப்பிற்கான நுழைவு தேர்வுகளுக்கு தயாராகி வந்தார்.
டாக்டருக்கு செல்ல பிராணிகள் என்றால் கொள்ள பிரியம். இவர் கடந்த மூன்று மாதங்களாக ஒரு பூனையை வளர்த்து வந்தார். ஆனால், வீட்டில் பூனை வளர்ப்பதற்கு இவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் டாக்டருக்கும் அவரது தாயாருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த பிரின்சி தனது அறையை உள்ளிருந்து பூட்டிக்கொண்டார்.
நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது அந்த பெண் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்ட குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அல்வால் போலீசார், பிரின்சியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் பூனை வளர்க்கும் விவகாரத்தில் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலைக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.