பணத்தைக் கடித்துக் குதறிய எலிகள் 
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி: பெண் சேமித்து வைத்த ரூ.12 லட்சம் பணத்தை கடித்து குதறிய எலிகள்

பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நார் நாராகக் கிழிக்கப்பட்டு, குப்பைக் கூளம் போலக் கிடந்துள்ளன.

லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் ஏழைப் பெண் ஒருவர் பெட்டியில் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த சுமார் 12 லட்சம் ரூபாய் பணத்தை எலிகள் கடித்துக் குதறி நாசமாக்கி உள்ளன.

பணம் சேமிப்பு

உத்தரப் பிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தனது குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளுக்காகவும், நகை எடுக்கவும் பல வருடங்களாக பணத்தைச் சேமித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு தங்க நகைகள் அணிவது மிகவும் பிடிக்கும். அதனால் அவர் தனது சேமிப்புப் பணம் முழுவதையும் வீட்டில் இருந்த ஒரு பழைய இரும்புப் பெட்டிக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

பெட்டியைத் திறந்தபோது அதிர்ச்சி

சமீபத்தில் நகை வாங்குவதற்காக அந்த பெண் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனார். பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நார் நாராகக் கிழிக்கப்பட்டு, குப்பைக் கூளம் போலக் கிடந்துள்ளன. பெட்டியின் ஓட்டை வழியாக உள்ளே புகுந்த எலிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை முற்றிலும் கடித்து துண்டு துண்டாக்கியது தெரியவந்தது.

கண்ணீரில் குடும்பம்

தங்கள் வாழ்நாள் சேமிப்பு மொத்தமும் எலிகளால் பாழானதைக் கண்டு அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுது புலம்பினர். கிழிக்கப்பட்ட நோட்டுகளை மாற்ற முடியுமா என்பது குறித்து அவர்கள் தற்போது வங்கி அதிகாரிகளை அணுகி ஆலோசனை கேட்டு வருகின்றனர்.

முன்னதாக, அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு ஏடிஎம் இயந்திரத்திற்குள் புகுந்த எலிகள், அங்கிருந்த ரூ.12 லட்சத்திற்கும் அதிகமான ரூபாய் நோட்டுகளைக் கடித்து நாசமாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் தங்களின் பணத்தை வீடுகளில் வைப்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான வங்கி கணக்குகளில் சேமிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.