புதுடெல்லி,
நாட்டில் உள்ள எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்களின் தகுதி மற்றும் அவர்களது அரசியல் செயல்பாடுகள். செய்த சேவைகள் பற்றி சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. எம்.பி.க்களில் 31 சதவீதம் பேரும், எம்.எல்.ஏ.க்களில் 29 சதவீதம் பேரும் கிரிமினல் குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 30 சதவீதம் பேர் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 2009- ஆண்டு எம்.பி.க்களாக இருந்தவர்களில் 14 சதவீதம் பேட் மட்டுமே கிரிமினல் வழக்குகளில் தொடர்பு உடையவர்களாக இருந்தனர். தற்போது அது அதிகரித்து இருக்கிறது. அதுபோல எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளும் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.
நாடு முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அவர்களில் ஆந்திரா மாநிலத்தில்தான் அதிக பட்சமாக 56 சதவீத எம்.எல்.ஏக்கள் குற்ற பின்னணியில் இருப்பது தெரிய வந்துள்ளது. தெலுங்கானாவில் உள்ள 50 சதவீத எம்.எல்.ஏக்கள் மீது கொலை, கொள்ளை, கடத்தல் வழக்குகள் இருக்கின்றன.
கட்சி வாரியாக ஆய்வு செய்ததில் தெலுங்கு தேசம் கட்சியில் 61 சதவீத எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகல் பதிவாகி இருக்கிறது. பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏக்களில் 61 சதவீதம் பேர் கிரிமினல்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். எம்.பி.க்களில் தெலுங்கானா மாநில எம்.பி.க்கள் 71 சதவீதம் பேர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளனர். பீகார் எம்.பி.க்களில் 41 சதவீதம் பேர் குற்றவாளிகளாக இருக்கிறார்கள்.