ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குண்டால்தான் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை கொண்டு அம்மாநில போலீஸ் மற்றும் பாதுகாப்பு படைகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அப்போது வீடு ஒன்றுக்குள் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதலை மேற்கொண்டார்கள். பாதுகாப்பு படை தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இதனையடுத்து இருதரப்பு இடையேயும் மோதல் வெடித்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினரின் அப்பகுதியை சேர்ந்த மக்களை வெளியேற்றினார்கள். சண்டையின் போது பாதுகாப்பு படை கொடுத்த பதிலடியில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சண்டையின் போது பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்து உள்ளார், சிலர் காயம் அடைந்துள்ளார்கள். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட பயங்கரவாதி சமீர் அகமது உள்ளூரை சேர்ந்தவன் என்றும் பாபர் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்றும் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இருதரப்பு இடையே சண்டை நடைபெற்ற போது பொதுமக்கள் இடையூறை ஏற்படுத்தினர், அவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்களை பாதுகாப்பு படை விரட்டியது.