புதுடெல்லி,
உலக அளவில் யூரியா உரத்தை இந்தியாதான் அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. சீனாவில் இருந்தே அதிகமான அளவு யூரியாவை இந்தியா இறக்குமதி செய்தாலும் தேவை பூர்த்தியாகவில்லை. இந்த நிலையில்தான் யூரியாவுக்கு மாற்றாக, அன்ஹைட்ரஸ் அமோனியாவை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அன்ஹைட்ரஸ் அமோனியா என்பது திரவ வடிவில் உள்ள வாயுவாகும். இதை மண்ணில் உட்செலுத்தி பயிர் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. திட வடிவ யூரியாவில் 46 சதவீதம் நைட்ரஜன் உள்ளது. ஆனால், அன்ஹைட்ரஸ் அமோனியாவில் 82 சதவீதம் நைட்ரஜன் உள்ளது.
இந்த வாயுவை விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு மண்ணுக்குள் உட்செலுத்தும் சிறப்பு தொழில்நுட்பம் மற்றும் அதற்கான உட்கட்டமைப்பை உருவாக்க வேண்டியுள்ளது. அன்ஹைட்ரஸ் அமோனியா பயன்பாடு சரியாக அமல்படுத்தப்பட்டால், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து விவசாயத்தில் இதை நேரடியாக பயன்படுத்தும் உலகின் 4-வது நாடாக இந்தியா இருக்கும்.