சண்டிகர்,
பஞ்சாபி பாடகர் மற்றும் சமூக ஆர்வலரான சித்து மூஸ்வாலா, கடந்த மே 29-ந்தேதி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடர்ந்து வந்த கும்பல், கொடூரமான முறையில் அவரை சுட்டு கொன்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
சித்து மூஸ்வாலா கொலை செய்யப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்த காவல் துறை பாதுகாப்பு நீக்கி கொள்ளப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக பஞ்சாப் மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய தீபக், கபில் பண்டிட் மற்றும் ராஜீந்தர் ஆகிய 3 பேர் மேற்கு வங்காளம்-நேபாளம் எல்லையில் உளவுத்துறை நடவடிக்கையின் பேரில் ஏ.ஜி.டி.எப். குழுவினரால் கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், போலீசாரின் காவலில் இருந்த தீபக் டினு, தப்பி சென்று விட்டார் என அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்தனர். கடந்த 1-ந்தேதி இரவில் சம்பவம் நடந்து உள்ளது. அடுத்த நாளில் இருந்து டினுவை தேடி பிடிக்கும் பணி நடந்து வந்தது. மற்றொரு வழக்கு ஒன்றில் கோயிந்வால் சாகிப் சிறையில் இருந்து மன்சா மாவட்ட போலீசாரால் டினு அழைத்து வரப்பட்டபோது, நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்தது.
லாரன்ஸ் பிஷ்னோய் என்ற தாதாவின் நெருங்கிய உதவியாளராக செயல்பட்டு வந்தவர் டினு ஆவார். இதுபற்றி பத்திண்டா ஐ.ஜி. முக்வீந்தர் சிங் சின்னா கூறும்போது, இதுபற்றி நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். போலீசார் தங்களுடைய பணியை செய்து வருகின்றனர். விரைவில் டினு பிடிபடுவார் என கூறினார்.
இந்த வழக்கில் தப்பியோடிய குற்றவாளி தீபக்கை போலீசார் தேடி வந்த நிலையில், நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்பு ராஜஸ்தானின் அஜ்மீர் நகரில் வைத்து அவரை சிறப்பு படை போலீசார் கைது செய்துள்ளனர்.
வழக்கில் தொடர்புடைய பஞ்சாபி பாடகர் ஜக்தர் சிங் மூசா என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். தீபக் டினுவின் காதலியான ஜதீந்தர் கவுர் என்பவரை மும்பை விமான நிலையத்தில் வைத்து குண்டர் ஒழிப்பு படையினர் கைது செய்தனர். கவுருக்கு நகர மருத்துவமனையில் நடந்த பரிசோதனைக்கு பின்பு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.