ராஞ்சி
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கிலுள்ள தனது இல்லத்தில் யஷ்வந்த் சின்ஹா செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் இருக்கும் அரசால், நாட்டில் இருக்கும் எந்த சமுதாயமும் பாதுகாப்பாக உணரவில்லை. நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல் போனதற்கு மத்திய பாஜக அரசே முழுமுதற் காரணம். உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் மற்றும் ஊடகங்கள் என நாட்டின் முக்கியமான அமைப்புக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் மோடி அரசு இறங்கியுள்ளது.
மத்திய அமலாக்கத் துறை, வருமான வரித் துறை,சிபிஐ, என்ஐஏ போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மத்திய அரசு தொந்தரவு அளித்து வருகிறது.
தனது விமர்சனத்தில் இருக்கும் உண்மை பற்றி, பாஜக-விலுள்ள தலைவர்களே பலர் தன்னைத் தொடர்பு கொண்டு பேசிவருவதாகவும், மேலும் பலர் தங்களது குரலை வெளிப்படுத்தத் தைரியமற்று இருப்பதாகவும் கூறினார்.
தேர்தல் அரசியலில் இருந்து விலகினாலும், விவசாயிகள்,முறைசாராத் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்காக, தான் தொடர்ந்து போராடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.