தேசிய செய்திகள்

ராகுல் காந்தியை நீக்கும் சூழல் காங்கிரஸ் கட்சிக்குள் உருவாகியுள்ளது: தேவேந்திர பட்னாவிஸ்

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா மனநிலையில் உள்ளவர்கள் அரசியலமைப்பை அழிக்க விரும்புகிறார்கள் என்று ராகுல் காந்தி விமர்சித்து இருந்தார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அரசியலமைப்பை அழிக்க விரும்புவதாக குற்றம்சாட்டினார். இது குறித்து அவர், “அரசியலமைப்பு இல்லையென்றால், நாம் இந்தியா என்று அழைப்பது இருந்திருக்காது. இன்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா மனநிலையில் உள்ளவர்கள் அரசியலமைப்பை அழிக்க விரும்புகிறார்கள்

அவர்கள் என்ன சொன்னாலும், அவர்களின் முக்கிய நோக்கம் அரசியலமைப்பை அழிப்பதுதான், ஏனெனில் இந்தியாவில் அனைவரும் சமமாக இருப்பதை அவர்கள் விரும்பவில்லை,” என கூறியிருந்தார். இந்த நிலையில், நேற்று நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ராகுல் காந்தி தனது சொந்த பிழைப்பிற்காகவும், தொடர் தோல்விகளில் இருந்து தனது தலைமைத்துவத்தை காப்பாற்றிக்கொள்ளவும் மட்டுமே போராடி வருகிறார். காங்கிரசுக்கு தேர்தல் வெற்றிகளை பெற்றுத்தர முடியாததால், ராகுல் காந்தியை நீக்க அக்கட்சியினுள் ஒரு சூழல் உருவாகி வருகிறது. தனது கட்சிக்குள் இருக்கும் மோதல்களில் இருந்து கவனத்தை திசைதிருப்பவே அவர் இதுபோன்ற கருத்துகளை கூறி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT