தேசிய செய்திகள்

கும்பமேளா ஒப்பந்தம் பெற்று தருவதாக ரூ.3.05 கோடி மோசடி செய்த கும்பல் கைது

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நாசிக்,

மராட்டிய மாநிலம் நாசிக்கில் வரவிருக்கும் 2027-2028-ம் ஆண்டுக்கான உலகப் புகழ்பெற்ற கும்பமேளா விழாக்கால பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெற்றுத்தருவதாக கூறி, பலரிடம் ரூ.3.05 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் நாசிக் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலி பணி நியமன ஆணை

இதில், மோசடி கும்பல் கும்பமேளா ஒப்பந்தங்களை தங்களுக்கு சாதகமாக பெற்றுத்தருவதாக ஆசைவார்த்தை கூறி கோடிக்கணக்கில் பணம் வாங்கியதும், முதலீட்டாளர்களை நம்ப வைப்பதற்காக போலி பணி நியமன ஆணைகளை தயாரித்து கொடுத்து ஏமாற்றியதும் அம்பலமானது. இந்த நூதன மோசடி தொடர்பாக தனிப்படை போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.

தீவிர விசாரணை

கைது செய்யப்பட்டவர்கள் தனய் ஆனந்த் மகாஜன்(வயது32), நரேந்திர தோதாராம் மகாஜன் (51), சோயிப் அகமது அப்துல் சத்தார் சேக்(36), அப்துல் ரயிஸ் அப்துல் முனாப் சேக்(43), ஷகீல் அகமது சலிமுத்தீன் சேக் (42) மற்றும் முகமது வசீம் அப்துல் கபார்(42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.