விபத்து 
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் நிகழ்ந்த கோர விபத்து... கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன 6 உயிர்கள்

காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தையை போலீசாரும் பொதுமக்களும் இணைந்து பத்திரமாக மீட்டனர்.

மும்பை:

மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டம் அமால்னர்-துலே நெடுஞ்சாலையில் இன்று காலை மூன்று வாகனங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்துக்குள்ளாகின. குஜராத்தில் இருந்து வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஒரு பைக் மீது மோதியதுடன், எதிரே வந்த அரசு பேருந்து மீதும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மாங்ரல் கிராமத்தில் உள்ள விருந்தாவன் ஓட்டல் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் அப்பகுதி மக்கள், பேருந்து டிரைவர், கண்டக்டர் ஆகியோரும் மீட்பு பணிக்கு உதவினர்.

6 பேர் உயிரிழப்பு

இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் சிதைந்தது. அதில் பயணித்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல் பேருந்தின் மீது மோதியதால் காரும் நொறுங்கியது. அதில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கார் டிரைவரின் கால்கள் முறிந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பேருந்தில் பயணித்த ஒரு பயணிக்கு காயம் ஏற்பட்டது. அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த குழந்தையை போலீசாரும் பொதுமக்களும் இணைந்து பத்திரமாக மீட்டனர்.

காரில் பயணித்தவர்கள் அமால்னரில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு சென்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.