தேசிய செய்திகள்

மணிப்பூரில் 6 பயங்கரவாதிகள் கைது

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மணிப்பூர் வனத்துறையில் பணியாற்றி வருபவர் ஆவார்.

இம்பால்,

கலவரம் பாதித்த மணிப்பூரில் பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது. இதில் பல்வேறு நபர்கள் அடுத்தடுத்து கைதாகி வருகின்றனர். அந்தவகையில் கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் நேற்று முன்தினம் நடந்த அதிரடி வேட்டையில் 6 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரிடம் சிக்கினர்.

இவர்கள் மிரட்டி பணம் பறித்தல், ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சதி செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மணிப்பூர் வனத்துறையில் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே காங்போபி மற்றும் சேனாபதி மாவட்டங்களில் இருந்து ஏராளமான ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.