புதுடெல்லி,
உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் 6 மக்களவை எம்.பி.க்களை விலைக்கு வாங்க ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியிருந்தார்.இதற்காக ரூ.15 கோடி முன்பணமாக வழங்கப்பட்டதாகவும், எம்.பி.க்களை தனி விமானத்தில் டெல்லிக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறியிருந்தார். இது தொடர்பாக மக்களவை சபாநாயகருக்கு கடிதமும் எழுதப்பட்டது.
அதிருப்தி எம்.பி.க்கள் துணை முதல்-மந்திரியான ஏக்நாத் ஷிண்டேயுடன் தொடர்பில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் பாராளுமன்ற எம்.பி.க்கள் குழுக் கூட்டம் இன்று நடைபெறும் என்றும், இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்.பி.க்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், பங்கேற்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் பாராளுமன்ற மக்களவை எம்.பி.க்கள் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தை 6 எம்.பி.க்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதன் மூலம் அவர்கள் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா அணியில் இணைவது உறுதியாகிவிட்டது. இந்தக் கூட்டத்தில் அரவிந்த் சாவந்த், அனில் தேசாய், ராஜபாவ் ஆகிய 3 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்து வெளியே வந்த அனில் தேசாய் கூறும்போது, கூட்டத்தில் பங்கேற்காத எம்.பி.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்.