திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில், அபுதாபியில் இருந்து வந்த தமிழக தம்பதியிடம் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ரிப்னாஸ் ஹமீது மற்றும் ஜனாபர் காதர் ஆகிய இருவரும், சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனையில் சிக்காமல் இருக்க, தங்கத்தை பசை வடிவில் மாற்றி தங்கள் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்றனர்.
அவர்களின் நடத்தையை கண்டு சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களை தனி அறையில் சோதனையிட்டபோது, 170 பவுன் கடத்தல் தங்கம் சிக்கியது. இதையடுத்து அந்த தம்பதியை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலின் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.