மும்பை,
மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டம் ஜப்தலை கிராமத்தில் அரசு உதவி பெறும் பழங்குடியின உறைவிடப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி விடுதியில் பழங்குடியின மாணவ, மாணவியர் தங்கி கல்வி பயின்று வந்தனர்.
இதனிடையே, இந்த பள்ளி விடுதியில் நேற்று முன் தினம் இரவு மாணவியர் தரையில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, விடுதி அறைக்குள் புகுந்த பாப்பு அங்கிருந்த 6 மாணவிகளை கடித்தது. இதில் 8, 12 மற்றும் 14 வயதுடைய 3 மாணவிகள் உயிரிழந்தனர். மேலும், 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி விடுதியில் பாம்பு கடித்து 3 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பவம் நடந்த அரசு உதவி பெறும் பள்ளியின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்து மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள பழங்குடியின உறைவிடப்பள்ளிகளில் ஆய்வு நடத்தி அதன் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மராட்டிய முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.