தேசிய செய்திகள்

தன்னைக் கடித்த பாம்பை கடித்தே கொன்ற நபர்: பீகாரில் நடந்த சம்பவம்

பாம்பை திருப்பி கடித்தால், தனது உடலில் இருக்கும் விஷம் ஒன்றும் செய்யாது என்ற மூட நம்பிக்கை தொழிலாளிக்கு இருந்தது.

பாட்னா,

பொதுவாக பாம்பு கடித்து மனிதர்கள் உயிரிழப்பது வழக்கம். பாம்பு கடித்தவர்கள், கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு அழைத்து வருவதும் வழக்கம். ஆனால், இதற்கு மாறாக பீகாரில் இது போன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

பீகாரின் நவாடா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் லோஹர். கூலித் தொழிலாளியான இவர், வேலை முடித்துவிட்டு ரெயில் தண்டவாளம் அருகே உள்ள குடிசையில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது, விஷப்பாம்பு அவரை கடித்தது. அப்போது, அந்த பாம்பை திருப்பி கடித்தால், தனது உடலில் இருக்கும் விஷம் ஒன்றும் செய்யாது என்ற மூட நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த எண்ணத்தில், சந்தோஷ் தன்னை கடித்த பாம்பை பிடித்து 3 முறை கடித்து உள்ளார். இதில் அந்த விஷப்பாம்பு அந்த இடத்திலேயே உயிரிழந்தது.

உடனடியாக சந்தோஷ் லோஹர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்த பிறகு உடல் நலம் அடைந்ததைத் தொடர்ந்து மறுநாள் மகிழ்ச்சியாக வீடு திரும்பினார்.

SCROLL FOR NEXT