பாட்னா,
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் பிரதானமாக களத்தில் இருந்தன.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வழக்கமாக பிற்பகலுக்குள் தேர்தல் முடிவுகள் ஏறக்குறைய தெரிந்துவிடும். ஆனால், பீகார் சட்டமன்ற தேர்தலில் தற்போது வரை குறைந்த அளவு சுற்றுக்களே எண்ணப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. குறிப்பாக அதிகபட்சமாக 1000 வாக்காளர்களுக்கு ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்ற அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு இருந்தது. கூடுதல் எந்திரங்கள் காரணமாக தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆகும் என தேர்தல் அதிகாரிகள் முன்பே கூறியிருந்தனர்.
இதற்கிடையே, மாநில தேர்தல் அதிகாரி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பீகாரில் தேர்தல் முடிவுகள் வெளியாக தாமதம் ஆகும் என்றார். மேலும், பதிவான 4.10 கோடி வாக்குகளில் வெறும் 92 லட்சம் வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. வழக்கமாக 25 முதல் 26 சுற்றுக்களாக எண்ணப்படும் வாக்குகள் இம்முறை 35 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. எனவே வாக்கு எண்ணும் பணி முடிய இரவு வரை ஆகலாம் என்றார்.