தேசிய செய்திகள்

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பார்க்க தடை.. கர்நாடக அரசு அதிரடி

2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா தாக்கல் செய்தார்.

பெங்களூரு,

கர்நாடக மாநில சட்டசபை ஆண்டுக்கு 4 முறை கூடுகிறது. அதாவது ஆண்டின் தொடக்கமான ஜனவரியில் கூட்டுக் கூட்டத்தொடர், பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், டிசம்பரில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுவது வழக்கம். அதன்படி கர்நாடக சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சிகள் அடிக்கடி தர்ணா நடத்தியதால் பல்வேறு பிரச்சினைகள் குறித்து சரியான முறையில் விவாதிக்கவில்லை. கலால்துறை முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று அத்துறை மந்திரி ஆர்.பி.திம்மாபூர் ராஜினாமா செய்யக் கோரி கடைசி நாளில் எதிர்க்கட்சிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தின. இது மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது. 9 நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் 6-ந் தேதி (அதாவது இன்று) பெங்களூருவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கர்நாடக சட்டசபை பெங்களூரு விதான சவுதாவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

முதல் நாளில் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அதாவது நிதிநிலை அறிக்கை (வரவு-செலவு திட்டம்) தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது ​​16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மேலும், அதிகரித்து வரும் மொபைல் பயன்பாட்டின் பாதகமான விளைவுகளைத் தடுக்க 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் தடை செய்யப்படும் என்றும், மொபைல் போன் பயன்பாட்டினால் குழந்தைகளுக்கு ஏற்படும் எதிர்மறையான தாக்கத்தை தடுப்பதே இந்த தடையின் நோக்கமாகும் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஐஐஎஸ்சியின் (IISC) கீழ் உள்ள ஏ.ஐ. மற்றும் டெக் பூங்கா, இஸ்ரோ மற்றும் கியோனிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து பெங்களூரு ரோபாட்டிக்ஸ் மற்றும் ஏ.ஐ. புதுமை மண்டலம் என்ற ரோபாட்டிக்ஸ் மற்றும் ஏ.ஐ. வளாகம் அமைக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.

சித்தராமையா ஏற்கனவே 16 முறை கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். தற்போது அவர் 17-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதிக முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் என்ற பெருமை அவருக்கு ஏற்கனவே உண்டு. இந்த பட்ஜெட் அளவு ரூ.4 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக மதுபானம் மீதான கலால் வரி, பெட்ரோல்-டீசல் மீதான செஸ் வரி அதிகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.