தேசிய செய்திகள்

இந்தியா திரும்பினால் மகன் கைது? 'கரப்பான்பூச்சி' கட்சி நிறுவனரின் பெற்றோர் பேட்டி

அபிஜீத் திப்கே கரப்பான்பூச்சியை சின்னமாக கொண்டு, டிஜிட்டல் கட்சியை தொடங்கி நெட்டிசன்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரை சேர்ந்தவர் அபிஜீத் திப்கே. இவர், தற்போது அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படித்து வருகிறார். அபிஜீத் திப்கே சமீபத்தில் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ‘கரப்பான் பூச்சி ஜனதா’ என்ற கட்சியை தொடங்கினார். வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, போலி சான்றிதழ்கள் மூலம் வக்கீல் தொழிலுக்குள் நுழைபவர்களை கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாத இளைஞர்களை ஒட்டுண்ணிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் என விமர்சித்ததாக ஒரு சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் தான் அபிஜீத் திப்கே கரப்பான்பூச்சியை சின்னமாக கொண்டு, டிஜிட்டல் கட்சியை தொடங்கி நெட்டிசன்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார். தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது.   இதுகுறித்து அபிஜீத் திப்கே பெற்றோர் கண்ணீருடன் அளித்துள்ள பேட்டியில், ‘தற்போதைய அரசியல் சூழலில் இருக்கும் நிலையை பார்த்து எங்களுக்கு பயமாக இருக்கிறது.

இந்தியா திரும்பினால், தான் கைது செய்யப்படலாம் என எங்களது மகனே ஒரு பேட்டியில் கூறியிருந்தான். இதனால் கடந்த 2 நாட்களாக நாங்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு தவிக்கிறோம். எங்களது மகன் அபிஜீத் அரசியலுக்கு வருவதில் எங்களுக்கு துளியும் விருப்பமில்லை’ என்றனர்.