காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும், பயப்படும் அளவிற்கு அவரது உடல்நலத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: “பருவநிலை மாற்றம் காரணமாக சோனியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனினும் அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை. அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.”
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி வத்ரா ஆகிய இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். தாயாரை சந்தித்து உடல்நலம் விசாரித்த ராகுல் காந்தி, சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.