புதுடெல்லி,
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த ஜனவரி மாதம் காவல் பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த பயங்கரவாதிகளை போலீஸ் டி.ஐ.ஜி. கண்ணன், சூப்பிரண்டுகள் ஜே.மகேஷ், எஸ்.அரவிந்த், துணை சூப்பிரண்டு பி.பண்டரிநாதன், இன்ஸ்பெக்டர் எம்.தாமோதரன் ஆகியோர் கைது செய்தனர்.
ஆபரேஷ் குவாண்டோ மூலம் அவர்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையை பாராட்டி அவர்களுக்கு 2020-ம் ஆண்டுக்கான மத்திய உள்துறை மந்திரியின் சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இவர்களுடன் கர்நாடகம், கேரளா, குஜராத் மற்றும் டெல்லி போலீசாரில் சிலருக்கும் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அதிகாரிகள் 5 பேரும் பயங்கரவாதிகளைப் பிடித்த அந்த வீர, தீரச் செயலுக்காக, தமிழக அரசின் முதல்-அமைச்சர் பதக்கத்தை ஏற்கனவே பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.