புதுடெல்லி
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் ஏப்ரல் 16 முதல் 18 வரையிலான 3 நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளை சேர்ந்த அனைத்து பா.ஜ.க. எம்.பி.க்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அக்கட்சி சார்பில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அனைவரும் கட்டாயம் சிறப்பு கூட்டத்தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஒருவருக்கும் விடுமுறை அளிக்கப்படாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்படும். இதில் 2 பெரிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு உள்ளது என கூறப்படுகிறது. அதனால், உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தொடரில் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் உங்களுடைய ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனினும், காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான கார்கே, அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.