தேசிய செய்திகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி; தேசம் கவலைப்பட வேண்டிய விஷயம்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் பரபரப்பு பேட்டி

நாட்டின் 17-வது தேர்தல் ஆணையாளரான அவர், 2010 முதல் 2012 வரை அந்த பதவியை வகித்தவர்.

புதுடெல்லி

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி உண்மையில், தேசம் கவலைப்பட வேண்டிய விஷயம் என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் பேட்டியில் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் எஸ்.ஒய். குரேஷி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் பெயர் நீக்கத்திலேயே கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.

ஜனநாயகம் சீர்குலைவு

வாக்காளர் பட்டியலிலிருந்து எத்தனை பேரை நீக்க முடியும் என்பதுதான் அதன் மையமாக தெரிகிறது என குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் உண்மையிலேயே ஜனநாயகம் சீர்குலைந்துள்ளது எனவும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தேசம் கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம் என்றும் கூறியுள்ளார்.

நாட்டின் 17-வது தேர்தல் ஆணையாளரான அவர், 2010 முதல் 2012 வரை அந்த பதவியை வகித்தவர். தன்னுடைய பதவி காலத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிடமிருந்து எந்த நெருக்கடியும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.