புதுடெல்லி,
கடந்த நவம்பர் 30-ந் தேதியுடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய பதவி நீட்டிப்பு முடிவடைந்தது. இந்த நிலையில், அவர் சிலை கடத்தல் தடுப்பு வழக்கு ஆவணங்களை அந்த பிரிவு உயர் அதிகாரியிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சிலை கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை அந்த பிரிவு உயர் அதிகாரியிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு கடந்த 2-ந் தேதி உத்தரவிட்டது.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை உயர் அதிகாரியிடம் ஒப்படைக்கவில்லை என்றும், எனவே அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி தமிழக அரசு தரப்பில் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பொன் மாணிக்கவேல் இதுவரை தாக்கல் செய்த ஆவணங்கள் மற்றும் மீதம் உள்ள ஆவணங்களை தாக்கல் செய்ய எத்தனை நாட்களாகும் என்பது குறித்த அறிக்கையை கோர்ட்டுக்கு 16-ந் தேதிக்குள் (நேற்று) தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன் மாணிக்கவேல் தரப்பில் வக்கீல் சாயி தீபக் ஆஜராகி சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக 17 ஆயிரத்து 754 பக்க ஆவணங்களை ஒப்படைத்து விட்டதாகவும், அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்து இருப்பதாகவும் கூறினார்.
இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் சில சான்றிதழ்கள் இல்லை என்றும், குறிப்பாக தொன்மையான சிலைகள் குறித்த சான்றிதழ்கள் இல்லை என்றும், எனவே அது குறித்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள், பொன் மாணிக்கவேல் 2 வாரங்களுக்குள் அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.