தேசிய செய்திகள்

வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு -வாலிபர் கைது

காதலி தன்னை புறக்கணித்ததால் ஏற்பட்ட மனஉளைச்சலின் காரணமாக, அதே நேரத்தில் வந்த ரெயில் மீது மூன்று முறை கல் வீசியதாக அவர் ஒப்புக்கொண்டார்

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் – மங்களாபுரம் இடையே இயங்கும் வந்தே பாரத் ரெயில் கடந்த 7-ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தது. நெடும்பாஞ்சேரி விமான நிலையம் அருகிலுள்ள தண்டவாளத்தில் வந்தபோது, ரெயிலின் ஒரு பெட்டியின் வெளிப்புறத்தில் திடீரென சத்தம் கேட்டது.

இதனுடன், ஜன்னல் கண்ணாடியின் ஒரு பகுதி உடைந்திருந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.விசாரணையில், மர்ம நபர் ரெயில் மீது கல் வீசியதால் ஜன்னல் கண்ணாடி உடைந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

அதில், 19 வயது வாலிபர் இந்த செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், காதலி தன்னை புறக்கணித்ததால் ஏற்பட்ட மனஉளைச்சலின் காரணமாக, அதே நேரத்தில் வந்த ரெயில் மீது மூன்று முறை கல் வீசியதாக அவர் ஒப்புக்கொண்டார். அதில் ஒரு கல் ரெயிலில் பட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாலிபரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.