சிவமொக்கா;
ஆலோசனை கூட்டம்
சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் பிரவசத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளின் உறவினர்களிடம் சில மருத்துவ ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக கூறப்படுகிறது. அதாவது பிரசவ வார்டில் குழந்தையை பார்க்கவிடுவது, தாய்-சேயை நன்றாக கவனிப்பதற்கு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதுபற்றி சிவமொக்கா மாவட்ட கலெக்டர் செல்வமணியின் கவனத்திற்கு வந்தது.
இதைதொடர்ந்து நேற்றுமுன்தினம் மாலை கலெக்டர் செல்வமணி சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர், அங்குள்ள அரங்கில் தலைமை டாக்டர், சுகாதாரத்துறை ஊழியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது அவர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் பெண்களின் குழந்தைகளை உறவினர்கள் பார்க்க மற்றும் நன்றாக கவனிப்பதற்காக உறவினர்களிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் வந்துள்ளது. இது மனிதநேயமற்ற செயலாகும்.
எனவே, லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனை கண்காணிக்க பிரசவ வார்டில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும் என்றார்.