தேசிய செய்திகள்

துப்புரவுப் பணிகளில் அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை: டெல்லி மேயர் எச்சரிக்கை

சிறப்பாக பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் வெகுமதிகள் வழங்கப்படும் என்று டெல்லி மேயர் தெரிவித்துள்ளார்.

புது டெல்லி,

டெல்லி மேயர் பிரவேஷ் வாஹி இன்று அனைத்து மண்டல துணை ஆணையர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் அவர் கூறியதாவது:-

‘நகரத்தின் தூய்மையை மேம்படுத்த பயனுள்ள செயல் திட்டத்தை உருவாக்குமாறு வலியுறுத்திய அவர், துப்புரவுப் பணிகளுக்கே தனது முன்னுரிமை எனத் தெரிவித்தார். துப்புரவுப் பணிகளில் எந்தவிதமான மெத்தனப்போக்கும் சகித்துக்கொள்ளப்படாது என தெரிவித்துள்ளார்.

மேலும், தூய்மைப் பணிகள் திருப்திகரமாக இல்லாத பகுதிகளில், சம்பந்தப்பட்ட தனியார் கழிவு மேலாண்மை முகமைகள் (Waste Management Agencies) மீது பொறுப்பு நிர்ணயிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவி சுகாதார ஆய்வாளர்கள் களத்தில் தங்கி பணிகளை நேரடியாகக் கண்காணிக்கபட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அப்போதுதான் தரைமட்டத்தில் உண்மையான மாற்றம் தெரியும் என்று கூறினார். மேலும், சிறப்பாகப் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் வெகுமதிகள் வழங்கப்படும் என்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் சீருடை அணிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

டெல்லி காவல்துறையின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத இறைச்சிக் கடைகள் மற்றும் அனுமதியற்ற பால் பண்ணைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் முதல்-மந்திரி ரேகா குப்தாவின் தலைமையின் கீழ் டெல்லியை சுத்தமாகவும் அழகாகவும் மாற்றுவதே தங்கள் இலக்கு என்றும் இதற்காக அதிகாரிகள் அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்’ என்று கூறினார்.