தேசிய செய்திகள்

மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு: 35 விளையாட்டுகளை அங்கீகரித்து அரசாணை வெளியீடு

இனி வரும் காலங்களில் விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கை திருத்தப்பட்ட வழிகாட்டுதல்படி நடைபெறும்.

புதுச்சேரி,

புதுச்சேரி உயர்கல்வி துறை செயலாளர் மாலதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் மாணவர் சேர்க்கையில் தகுதியுள்ள விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்க்க உயர்கல்வித்துறை முடிவு செய்தது. இதற்காக விளையாட்டு பிரிவுகளை ஆய்வு செய்யவும். முறைப்படுத்தவும். பரிந்துரைக்கவும் புதுவை அரசால் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு

அந்த குழுவினர் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்காக அங்கீகரிக்கப்பட்ட மற்றும் செல்லுபடியாகும் பட்டியலில் 35 விளையாட்டு பிரிவுகளை ஏற்று கொள்வதாக பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

35 விளையாட்டு பிரிவுகள் விவரம் வருமாறு:-

வில்வித்தை, கராத்தே, தடகள போட்டிகள், கயாங்கின், கேனோயிங், பூப்பந்து, கோ-கோ, மல்லர்கம்பம், கூடைப்பந்து. வலைப்பந்து. குத்துச்சண்டை, பாரா விளையாட்டுகள், கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், காது கேளாதோர்களுக்கான விளையாட்டு, டேபிள் டென்னிஸ், கால்பந்து, டென்னிஸ், ஜிம்னாஸ்டிக், ஆக்கி உள்ளிட்ட 35 விளையாட்டுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கை திருத்தப்பட்ட வழிகாட்டுதல்படி நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.