தேசிய செய்திகள்

பெண் மந்திரி வீணா ஜார்ஜ் மீது மாணவர் காங்கிரஸ் தாக்குதல்: பினராயி விஜயன் கண்டனம்

வீணா ஜார்ஜ் மீது கேரள காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கண்ணூர்,

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பவர் வீணா ஜார்ஜ். இவர், நேற்று கண்ணூரில் நடைபெற்ற பன்னாட்டு ஆயுர்வேத மருத்துவ ஆய்வு மாநாட்டை தொடங்கி வைத்து பங்கேற்றார்.

இதையடுத்து மதியம் திருவனந்தபுரம் செல்வதற்காக கண்ணூர் ரெயில் நிலையத்திற்கு வந்தார். அவர் வந்தே பாரத் ரெயிலில் ஏறுவதற்காக சென்றபோது திடீரென்று அங்கு வந்த காங்கிரஸ் கட்சியின் கண்ணூர் மாவட்ட மாணவர் அமைப்பு தலைவர் முகமது சம்மாஸ் தலைமையில் மாணவர் அமைப்பினர், இளைஞரணியை சேர்ந்தவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அவருக்கு எதிராக கருப்புக்கொடி காண்பித்து போராட்டம் நடத்தினர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கிய வீணா ஜார்ஜ்க்கு கழுத்து மற்றும் கையில் காயங்கள் ஏற்பட்டது.

பின்னர் மந்திரி வீணா ஜார்ஜ் சிகிச்சைக்காக கண்ணூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். மந்திரியை தாக்கிய காங்கிரசின் இளைஞர் அணியினரின் செயல் அத்துமீறிய செயல், கண்டனத்துக்குரியது என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.