கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

சேர்க்கை மறுக்கப்பட்டதால் சென்னை, கான்பூர் ஐ.ஐ.டி. இணையதளங்களை ‘ஹேக்' செய்த மாணவர்

சைபர் பாதுகாப்பில் முன் அனுபவம் இல்லாததால் அந்த மாணவர் தேர்வு செய்யப்படவில்லை.

கான்பூர்,

தன்னை பட்டப்படிப்பில் சேர்க்க மறுத்து விட்டதால் சென்னை, கான்பூர் ஐ.ஐ.டி. இணையதளங்களை 'ஹேக்' செய்த மாணவருக்கு சட்ட நடவடிக்கைக்கு பதிலாக அவரது திறன்களை மதிப்பிட்டு கல்லூரியில் சேர வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இணையதளங்கள் முடக்கம்

சென்னை, உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி. (இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள்) ஆகியவற்றின் நிர்வாக சர்வர்கள், தரவுதளங்கள், பணம் செலுத்தும் அமைப்புகள், விண்ணப்பதாரர் தகவல்கள் அடங்கிய இணையதளங்கள் 'ஹேக்' செய்யப்பட்டன. இதுகுறித்து ஒரு மாணவர் தன்னை இளங்கலை சைபர் பாதுகாப்பு பட்டப்படிப்பில் நிராகரித்ததை தொடர்ந்து இந்த இணையதளங்களில் ஊடுருவியதாக சமூக ஊடகங்களில் தெரிவித்தார். 'ஹேக்' செய்த ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து, தனது நோக்கம் தீங்கு விளைவிப்பது அல்ல. மாறாக தனது திறமைகளை வெளிப்படுத்துவதே என தெரிவித்து இருந்தார்.

மேலும் ஐ.ஐ.டி.களில் சேர விண்ணப்ப செயல்முறையை முடித்து, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி, தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி, எனது சைபர் பாதுகாப்பு பணிக்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்து இருந்தேன். இருப்பினும், தேர்வு செய்யப்படவில்லை. இதனால் சேர்க்கை செயல்முறையின் ஒரு பகுதியாக இணையதளங்களை 'ஹேக்' செய்து நிரூபித்ததாகவும் கூறி இருந்தார்.

சைபர் பாதுகாப்பு

இது குறித்து கான்பூர் ஐ.ஐ.டி. இயக்குனர் மனீந்திர அகர்வால் கூறியதாவது:-

சைபர் பாதுகாப்பில் முன் அனுபவம் இல்லாததால் அந்த மாணவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்த ஆண்டு கல்வி அமர்வுக்கான சேர்க்கை செயல்முறை ஏற்கனவே முடிந்துவிட் டது. எனவே இப்போது சேர்க்கை சாத்தியம் இல்லை. இருப்பினும், நாங்கள் அந்த மாணவரை எங்கள் நிறுவனத்துக்கு அழைத்து, முறையான சோதனை மூலம் அவரது தொழில்நுட்ப திறன்களை மதிப்பீடு செய்வோம். அவர் தனது திறமையை நிரூபித்தால், அடுத்த சேர்க்கை சுழற்சியில் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்குவோம்.

கணினி அமைப்புகளை அனுமதியின்றி அணுகுவது சட்டவிரோதமானது. அது மீண்டும் ஒரு போதும் நிகழக்கூடாது என்று அந்த மாணவரிடம் கலந்துரையாடி அறிவுரை வழங்குமாறு மூத்த பேராசிரியர்கள் மற்றும் என்ஜினீயர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

வழக்குப்பதிய முடிவு செய்தோம்

கான்பூர் ஐ.ஐ.டி.யை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும் போது, "எங்கள் நிறுவனம் ஆரம்பத்தில் வழக்குப்பதிவு செய்வது குறித்து பரிசீலித்தது. ஆனால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு மாணவரின் கூற்றுகளை முதலில் சரிபார்த்து, அவரது தொழில்நுட்ப திறன்களை மதிப்பிட முடிவு செய்து உள்ளது.

கான்பூர் ஐ.ஐ.டி. இதற்கு முன்பும் இளம் சைபர் பாதுகாப்பு திறமையாளர்களை ஊக்குவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சி.பி.எஸ்.இ.யின் (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) இணையதளத்தின் குறைபாடுகளை கண்டறிந்த ஒரு மாணவருக்கு வாய்ப்பு வழங்கப்பட் டது" என தெரிவித்தார்.