புதுடெல்லி,
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் படித்து வரும் மாணவர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவி தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதம் முற்றியதில் பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 6க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் அகில பாரதீய வித்யார்த்தி பரிசத் (ஏ.பி.வி.பி.) அமைப்பின் தலைவர் ரோகித் குமார் என்பவரும் ஒருவர் ஆவார்.
2 ஆண்டுகளாக தங்களுடைய கல்வி உதவி தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதனை வழங்க வலியுறுத்தி பல்கலை கழகத்தின் நிர்வாகத்தினரிடம் முறையிட சென்றபோது, பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அடித்து விரட்டினர் என மாணவர்கள் கூறியுள்ளனர்.
எனினும், இரு தரப்பிலும் காயம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. ஆனால், டெல்லி போலீசாரோ தங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை என தெரிவித்து உள்ளனர்.