புதுடெல்லி
தெற்கு ரெயில்வேயின் புதிய பொது மேலாளராக சுப்பா ராவ் இன்று பதவியேற்று உள்ளார்.
தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளராக ஆர்.என். சிங் பதவி வகித்து வந்த நிலையில், அவருடைய பதவி காலம் நேற்று (ஜூலை 31, 2026) வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், புதிய பொது மேலாளராக சுப்பா ராவ் இன்று பதவியேற்று கொண்டார்.
இந்திய ரெயில்வே சேவை துறையில் 1987-ம் ஆண்டு முதல் தன்னுடைய பணியை தொடங்கிய ராவ், உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் தலைமை பொறுப்புகளை வகித்து உள்ளார். அவர் தெற்கு ரெயில்வேயின் புதிய பொது மேலாளராக பதவியேற்கும் முன்னர், சென்னை ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையின் பொது மேலாளராக பதவி வகித்துள்ளார்.
அதற்கு முன்பு, ஹப்பள்ளி, சேலம் மண்டலம், செகந்திராபாத், மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ரெயில்வே துறையில் பல்வேறு பணிகளை வகித்திருக்கிறார். இயந்திர பொறியியலில் பட்டப்படிப்பை முடித்துள்ள அவர், பெங்களூரு ஐ.ஐ.எம்.மில் பொது கொள்கை மற்றும் மேலாண்மை பட்டமேற்படிப்பையும் முடித்துள்ளார்.