புதுடெல்லி
டெல்லி கியாஸ் மையத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் 3 பேர் பலியான சம்பவத்திற்கு முதல்-மந்திரி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
டெல்லியின் வடமேற்கே திக்ரி காலன் பகுதியில் வாகனங்களுக்கான கியாஸ் நிரப்பும் மையம் ஒன்று இயங்கி வருகிறது. இதில், நேற்று லாரி ஒன்றிற்கு ஊழியர்கள் கியாஸ் நிரப்பிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென லாரியின் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.
இதில் அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து 6 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அதற்கு முன்பு, சிலிண்டர் வெடித்தபோது அங்கிருந்த 6 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மீதமுள்ள 3 பேரும் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர். அவர்களின் உடல்நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது.
இந்த சம்பவம் நடந்தபோது, தூக்கி வீசப்பட்டு காயமடைந்தவர்கள் காப்பாற்ற ஆளின்றி அரை மணிநேரம் வரை போராடியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 3 பேரும் ஊழியர்கள் ஆவர். லாரியின் ஓட்டுநர் உள்பட 3 பேர் காயமடைந்தனர் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கியாஸ் சிலிண்டர் வெடித்தபோது, மையத்தில் 4 முதல் 5 லாரிகள் வரை இருந்தன என்று சம்பவத்தின்போது தொலைவில் இருந்து பார்த்தவர்கள் கூறுகின்றனர். இதில், 2 லாரிகள், வேன் ஒன்று, இரு சக்கர வாகனம் ஒன்று மற்றும் அந்த மையத்தில் உள்ள சாதனங்களும் தீ விபத்தில் கருகி விட்டன.
இந்த சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர் உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.