புதுடெல்லி,
சர்க்கரை விலை உயர்ந்து வரும் நிலையில், சர்க்கரை ஆலைகளின் உயரிய அமைப்பான இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் தலைவர் நீரஜ் ஷிர்கோகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வர்த்தகர்கள் மற்றும் மொத்தமாக பயன்படுத்துவோரின் யூகபேர வணிகம், மோசமான வானிலையால் குறைவான உற்பத்தி உள்ளிட்ட காரணங்களால் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது.
செயற்கை தட்டுப்பாட்டை ஆலைகள் உருவாக்கவில்லை. இந்தியாவில் சர்க்கரைக்கு பற்றாக்குறை இல்லை. செப்டம்பர் மாத இறுதியில், 35 லட்சம் டன் சர்க்கரை கையிருப்பு இருக்கும். 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்ததால், சர்க்கரை விலை குறையத் தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் விலை குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.