தேசிய செய்திகள்

ராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை நீட்டிப்பு

ராதாபுரம் தொகுதி மறுவாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை சுப்ரீம் கோர்ட் நீட்டித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,


கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது

இன்பதுரை வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், செல்லாது என அறிவிக்கப்பட்ட 203 தபால் வாக்குகளையும், 19, 20, 21 ஆகிய சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மறு எண்ணிக்கை செய்யும்படி தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி ராதாபுரம் சட்டமன்றத்தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி நடைபெற்றது. ராதாபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பெட்டிகள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள ஒரு அறையில் வைத்து மீண்டும் எண்ணப்பட்டது. உயர்நீதிமன்றத் தலைமை பதிவாளர் நியமித்த, ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக வேட்பாளர் இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. அதேசமயம் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதித்திருந்தது.

இந்நிலையில், ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறு எண்ணிக்கை முடிவை வெளியிட 29 -ம் தேதி வரை தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இறுதி விசாரணை தேதி அடுத்த வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்