தேசிய செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விலகல்

வாதங்களை கேட்டறிந்த தலைமை நீதிபதி, நீதிபதி வி.மோகனா இடம்பெறாத அமர்வில் இந்த மனுக்களை பட்டியலிட உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி, வி.மோகனா அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி வி.மோகனா தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வக்கீல் ஹரிபிரியா பத்மநாபன், போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் நியமிக்கப்பட்டுள்ளார். அரசு தரப்பு கூடுதல் வக்கீலை நியமிக்க ஆலோசித்து வருகிறோம் என்று வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரனவ் சச்தேவா, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான மோசடி வழக்குகளை ஒன்றாக இணைத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை குற்றம் சாட்டப்பட்டவர்களாகவும், 700 சாட்சிகளையும் சேர்த்திருப்பது பிரச்சினையாக உள்ளது. இதனால் சாட்சிகளை விசாரிக்க முடியாமல் விசாரணை தொடங்கி நடைபெறாமல் உள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் விளக்கத்தை கேட்டு பெற தெரிவிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். வாதங்களை கேட்டறிந்த தலைமை நீதிபதி, நீதிபதி வி.மோகனா இடம்பெறாத அமர்வில் இந்த மனுக்களை பட்டியலிட உத்தரவிட்டுள்ளார்.