தேசிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கான தடை தொடரும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனுவை கடந்த டிசம்பர் 2-ந் தேதி தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வழக்கமான நீதிமன்ற செயல்பாடுகளின்போது எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தது

இதற்கிடையே மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக கருதி ஏப்ரல் மாதம் விசாரிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, ஹரீஷ் சால்வே ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஆஜராகி முறையிட்டனர்.

இதற்கு நீதிபதிகள், அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்ததோடு, மேல்முறையீட்டு மனு ஆகஸ்டு 17-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT